Thursday, January 26 36 comments

"இரண்டு சூவிங்கம் கொடுங்க"நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை






பரிதி வழக்கம் போல அதிகாலையே எழுந்து குளித்து முடி திருத்தும் நிலையத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

”என்னப்பா இது காயம்...?!” என கன்னத்தை பார்த்து கேட்டாள் அவர் மகள்.

”அது தெரியலைம்மா... ஏதோ பூச்சி கடிச்சு இருக்கும் போல.. அதான் வீங்கி இருக்கு.”

"என்னப்பா இப்படி சொல்றீங்க..?! பூச்சி கடிச்சது கூட தெரியாமலாதூங்குவீங்க...?? வலி அதிகமா இருக்காப்பா..??”


”வலி கொஞ்சம் அதிகமாதான்ம்மா இருக்கு. கொஞ்சம் சுண்ணாம்பு வச்சா சரியா போய்டும்.”

”ஐயோ... அதெல்லாம் வேணாம்ப்பா..ஹாஸ்பிட்டல் போங்கப்பா..நான் காலேஜ் போயிட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க” என சொல்லி புறப்பட்டாள்.

மகள் சொல்வதை கேட்காமல் பெட்டி கடையில் சுண்ணாம்பு வாங்கி வைத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார் பரிதி.


------------------------------------------------------

பரிதி பொறுப்பான குடும்ப தலைவர்.. மனைவி இறந்து பல வருடங்கள் ஆன போதும் தன் கடமைகளை சரியாக செய்து கொண்டிருப்பவர்... முடி திருத்தும் நிலையம் நடத்திவருகிறார். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்தே தன் இரு மகள்களையும் படிக்க வைக்கிறார்.

பரிதி. வழியில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வாடிக்கை. இப்படி நல்ல பழக்கங்களை வைத்திருக்கும் பரிதிக்கு, ஒரு கெட்ட பழக்கமும் இருக்கின்றது.

கோவிலுக்கு சென்று விட்டு அடுத்து அவர் செல்வது மாவா பான் பராக் கடைக்கு. ஒரு நாளைக்கு தேவையான மாவா வாங்கி கொண்டு அங்கேயே சிறிது போட்டு கொண்டு கடைக்கு நகர்ந்தார். மாவா போடும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி விட்டு இப்போது விட முடியாமல் தவித்து வந்தார்.

கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்த பரிதி, வாடிக்கையாளர் வந்தவுடன் முடிதிருத்தும் பணியை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை மாவாவை போட்டு கொண்டார்.  வாடிக்கையாளர் வந்தால் கூட பாக்கு போடுவதை நிறுத்த மாட்டார். மாவா போட்டு வேலை செய்தால் தான் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியுமென நினைத்து கொள்வார். 




வாடிக்கையாளர் சென்றவுடன். பரிதியுடைய நெருங்கிய நண்பர் கதிர் தினசரிநாளிதழ் வாங்கி கொண்டு வந்தார். செய்தித்தாளை பிரித்து இருவரும் படிக்கத் தொடங்கினர். மாவா பாக்கெட்டை எடுத்து தன் நண்பரிடம் கொடுத்தார் பரிதி.இருவரும் மாவாவை போட்டு கொண்டு செய்தித்தாளுடன் மாவாவையும் சேர்த்து அரைத்து கொண்டிருந்தனர். இப்படி பரிதி கடை தொடங்கியது முதல் நடந்து வருகிறது...மாவா மூலமே இருவரும் நெருங்கிய நண்பர்கள்.


வாடிக்கையாளர் வந்தவுடன் கதிர் “சரி பரிதி... நான் கிளம்புகிறேன் முடிந்தால் மாலை வருகிறேன். இல்லையேல் நாளை வருகிறேன்” என்று விடைபெற்று கொண்டார் கதிர்.

வாடிக்கையாளரை கவனித்த பரிதி வேலையை பார்த்து கொண்டிருந்த பொழுது பேச்சை தொடங்கிய வாடிக்கையாளர்...


”ஏன் பரிதி... நீ இந்த பாக்கு போடுறதை நிறுத்தவே மாட்டியா..?? முடிவெட்டும் போதாவது நிறுத்தவேண்டியது தானே?”

”அண்ணே...நானும் போடக்கூடாதுன்னுதான் நினைக்குறேன். ஆனா... முடிய மாட்டுதுண்ணே...காலைல கடைக்கு வரும்போது நேரா மாவா கடைக்குதானே கால் போகுது.. நான் முடி வெட்ட பழகும் போது இந்த பழக்கத்தையும் சேர்த்து கத்துகிட்டேண்ணே....”

”அட என்னப்பா நீ... இது சாதாரண விஷயம்ப்பா... பாக்கு போடணும்ன்னு நினைக்கும் போது சூவிங்கம் போட்டுக்கோப்பா... தன்னாலே மறந்திடுவே... சாதாரணமான ஆட்களுக்கே கேன்சர் எல்லாம் வருது. நீ வேற இந்த பாக்க போட்டு மெல்லுற.. பொம்பள பசங்க எல்லாம் வைச்சு இருக்க....பார்த்து நடந்துக்கோ..”


”அண்ணே... இந்த சூவிங்கம் போடுறதையெல்லாம் எப்போவோ செய்து பார்த்துட்டேண்ணே... இருந்தாலும் நான் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து
பார்க்கிறேன்.”

ஐம்பது ரூபாயை கொடுத்து வாடிக்கையாளர் விடைபெற்று கொண்டார்...

------------------------------------------------------

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அருகிள் வந்த மூத்தமகள்..
“என்னப்பா இன்னைக்கும் பாக்கு போட்டீங்களா?”

”ஏன்ப்பா இப்படி பாக்கு போடுறீங்க..?! எத்தனை தடவை சொன்னாலும் கேக்க
மாட்டீங்களா..??”

எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார் பரிதி...

”சரி வாங்க சாப்பிடலாம்.. பாக்கு போட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பா..”

சாப்பிடும்போது கேட்டாள், ”என்னப்பா ஹாஸ்பிட்டல் போனீங்களா...??”

”இல்லம்மா... கொஞ்சம் சுண்ணாம்பு வச்சேன். வலி கொஞ்சம் பரவாயில்லை.
தூங்கி எழுந்தா சரியா போய்டும் ”

இரவு உணவை முடித்து படுக்க சென்றார்.

காலை வெகு நேரமாகியும் எழவில்லை. சோர்வில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார்.

------------------------------------------------------------------------------

கதிர் செய்தித்தாளை வாங்கிக் கொண்டு கடைக்குச்சென்றார். கடை இன்னும் திறக்கப்படாமலே இருந்தது.பரிதியின் வருகைக்கு காத்திருந்து...அங்கேயேபேப்பர் படித்து கொண்டிருந்தார் கதிர். தன் வேலைக்கு நேரம் ஆவதால் செய்தித்தாளை கடையின் ஷட்டரில் மாட்டி வைத்து விட்டு சென்று விட்டார்.

மறுநாளும் கடை பூட்டி இருப்பதை பார்த்த நண்பர் பரிதியின் வீட்டுக்கே சென்றார். அங்கே பரிதி காய்ச்சலில் படுத்துகொண்டிருந்தார்.

”என்ன பரிதி... உடம்பு சரி இல்லையா...?! ”

”ஆமாண்டா... காய்ச்சல் அதிகமா இருந்துச்சு... நேத்து நைட்தான் கிளினிக்
போயிட்டு வந்தேன். ”

”என்னடா சொன்னாங்க... இப்போ எப்படி இருக்கு...?!”

”இப்போ காய்ச்சல் இல்லை. கன்னத்துல புண் இருக்கு. அதனாலதான்வந்திருக்கும்.எதுக்கும் ஒரு வாரம் கழிச்சு வந்து பாக்கச் சொன்னாரு டாக்டர். இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளை கடை
திறந்திடுவேன்டா.... ”

”சரிடா... எனக்கும் வேலைக்கு நேரமாச்சு. நானும் கிளம்புறேன். நாளைக்கு கடைக்கு வரேன். ”

-----------------------------------------------------------------------------

ஒரு வாரத்திற்கு மேல் காயம் ஆறுவதும், மீண்டும் வருவதுமாய் இருந்ததால்
மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்தார் பரிதி.

வழக்கம் போல காலையில் கதிர் பேப்பர் கொண்டு வர..” என்னடா இன்னுமா உனக்கு காயம் ஆறல.. இதுல பாக்கு வேறயா” என்று மாவாவை பிடிங்கி கொண்டார்.

”டேய்... கொஞ்சம் மாவா கொடுடா... நீ மட்டும் போடுறே..?”

”டேய்...ஒழுங்கா பேப்பர் படி.. ”  என பேப்பரை பிரித்த பொழுது... ஒரு துண்டு நோட்டீஸ் ஒன்று விழுந்தது..எதாவது விளம்பரமாய் இருக்குமென தூக்கிப்போட பார்த்தார் பரிதி.

”என்னடா அது என வாங்கி படித்த கதிர்.....

அதை பரிதியிடம் காண்பித்தார்..பார்த்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்...புற்றுநோய் கண்டறிய இலவச சோதனை என புற்று நோயின் அறிகுறிகள் தொடர்பான படங்கள் அந்த நோட்டீஸில் இருந்தது..  பரிதியின் கன்னத்தில்இருந்த காயங்கள் போலவே நோட்டீஸில் இருந்தது.

”என்னடா எனக்கு இருக்கற காயம் மாதிரியே இந்த நோட்டிஸ்ல இருக்கு. எனக்கு கேன்சரா இருக்குமோ..??”

”அதெல்லாம் இருக்காதுடா...ஆனா நமக்கும் நாற்பது வயசுக்கு மேல ஆகுது, நாற்பது வயசுக்கு மேல இருக்குறவங்க புற்றுநோய் இருக்கான்னுபரிசோதனை பண்ணிக்கணும்ன்னு சொல்றாங்க... வா... நாம போய் சும்மா பார்த்துட்டு வருவோம்.

------------------------------------------------------------------------

மறுநாள் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என பார்க்க சென்றனர்... பரிதியை ஒரு டாக்டர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். டாக்டர் மற்ற டாக்டரை அழைத்து காண்பித்தார்..

”பாக்கு போடுவீங்களா..?? ”

”ஆமா டாக்டர்..”

”எத்தனை வருசமா போடுறீங்க..??”

”இருபதுவருசமா போடுறேன் டாக்டர்..”

”வலி அதிகமா இருக்கா..?”

”ஆமாங்க... வலி அதிகமா இருக்கு.. ”

”பரிதி உங்களுக்கு புற்று நோய்க்கான அறிகுறி தெரியுது. நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... உங்க காயத்தை சோதனை செய்யணும்..நல்ல வேளையா இப்பயேவந்தீங்க... புற்றுநோய் முத்திப்போய் இருந்தா ஒண்ணுமே செய்திருக்க முடியாது...  கண்டிப்பா நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... புற்றுநோயை மேலும் பரவாம தடுத்திடலாம்.உங்க வீட்டுல யாராவது நாற்பது வயதிற்கு மேல இருந்தா வந்து பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்க பரிதி..”

”சரிங்க டாக்டர்” என தளர்ந்த குரலில் கூறி வெளியேறினார் பரிதி..

கதிரும் பரிதியும் பேசிக்கொண்டே சென்றனர்...

”இனிமே நாம பாக்கே போடக்கூடாது பரிதி.. ” என்றார் கதிர்.

”ஆமாண்டா...நல்ல வேளை உனக்கு ஒன்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க..  உனக்கு
ஒண்னும் ஆகலேன்னு இனி நீ பாக்கு போட ஆரம்பிச்சிராத..”

”நீ வேற பரிதி... நான் இனி போட மாட்டேன்டா.. யாராவது போடுறதை
பார்த்தாலும் தடுக்கப்போறேன்டா.. ”

”நல்லா சொன்னடா.. ஆனா எனக்கு இந்த நோய் தீவிரமாகிறதுக்குள்ள என் மகள்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை எப்படி அமைச்சு தரப்போறேன்னு கவலையா
இருக்கு.”

”கவலைப்படாதே அதான் ஆரம்பத்திலேயே வந்துட்டோம்ல சரியாகிடும்..”

“இனிமே நீயும் நல்லா உடம்பை கவனிச்சிக்கோ கதிர்” லேசாக கண்கள் கலங்கின பரிதிக்கு…

“நிச்சயமாடா.. என் மனைவிக்குக் கூட நாற்பது வயசு ஆகுது...அவளையும் நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் சோதனை செய்யப்போறேன்டா சரி...வா பரிதி... டீ குடிச்சிட்டு போகலாம்.. ”

”சரிடா. ”

பரிதி பெட்டி கடைக்கு சென்று... ”இரண்டு சூவிங்கம் கொடுங்க” என்றார். 







Monday, January 23 10 comments

உன்னை பற்றி...







என் வீட்டு
ஜன்னலிலிருந்து உன்னை
பார்க்கையில்..
ஜன்னல்கள் கூறுகின்றன
உன்னுள் சிறை பட்டுவிட்டேன்..!!!


தெரு முனை பூக்கடை
பூக்களெல்லாம்...
உன்னை பின் தொடர்கிறது..
நீ திரும்பி பார்த்து 
விடாதே...
மடிந்தே விடும்...!!!


ஓராயிரம் முறை
காதோரோம் சரிவது..
கூந்தல் மட்டுமல்ல
நானும் சரிந்து 
கொண்டிருக்கிறேன்...
நொடி கொருமுறை...!!!



ரோஜா செடி ஒன்று 
வளர்த்து வருகிறேன்
உனக்காக.. 
என்னை போலவே 
தினமும் பூத்து பூத்து
வாடி கொண்டிருக்கிறது
உன் வருகைக்காக...!!



உனக்காக காத்திருக்கிறேன்
உன் பாதையில்...
தனியாக காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...
உன் விழியருகே காத்திருக்கிறேன்
உன் ஒரு துளி பார்வைக்காக...!!



உன் வருகைக்காக 
காத்திருந்து காத்திருந்து 
வாடி போனேன் 
உயிரற்று..
என் வசந்த காலம் 
எப்போது 
தொடங்குமென 
காத்திருக்கிறேன் 
ஏக்கத்தோடு...!!!



Friday, January 6 9 comments

பாசத்தை பழி தீர்க்க...






ஆயிரம் கனவுகள்
ஆயிரம் தவிப்புகள்
ஆயிரம் ஏக்கங்கள்
பிறக்க போகும் என்னிடம் ...


அனைவரையும்
பரபரப்பில் ஆழ்த்தி
நான் மட்டும் சுற்றி சுற்றி
ஆடிக்கொண்டிருக்க...
ஒன்றும் தெரியாதது போல்
வீரிட்டு அழுது வெளிவர..
ஆனந்த கண்ணீரின் வரவேற்பில்


பாதுகாப்பான இருட்டு
உலகிலிருந்து
பாதுகாப்பற்ற இருட்டு
உலகத்தில் இனி..!!


ஒன்றுமறியாமல்
கண்களை சிமிட்டிக் கொண்டிருக்கையில்
அவளின் அரவணைப்பில்
உறங்கிப் போனேன்...


எட்டி எட்டி உதைக்க 
அவள் தட்டி தட்டி கொடுக்க 
ஆழ்ந்த உறக்கத்தை கொடுத்த
அவளின் உறக்கம் கெடுத்தேன்..!!


பார்த்து பார்த்து செய்த உன்னிடம் 
பார்க்காமல் கூட செய்ததில்லை 
பார்த்து செய்தாலும்
பாசகடனை தீர்க்க முடியாது..!!


ஏதேதோ இல்லம் தேடி 
விட்டு செல்லும் உன்னை
பார்த்து போ என்னும் 
மனம் உன்னை தவிர வேறு யாருக்கு..??


ஆயிரம் ஆயிரம் துளி 
பாசத்தை கொடுத்துவிட்டு
ஒரு துளி பாசத்தை கூட 
எதிர்பார்க்காத உன்னை..


அடுத்ததொரு ஜென்மத்தில் 
நான் நீயாகவும் நீ நானாகவும்
பிறந்தால் பாசத்தை 
பழி தீர்த்துக் கொள்வேன்...!!



Tuesday, January 3 2 comments

விமர்சனமா..?? மௌனகுரு



ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் விமர்சனம் பெரிதும் உதவியாய் இருக்கும். முன்பு சினிமா விமர்சனம் செய்யப்பட்டதை போல.. இப்பொழுது யாரும் சரியாக விமர்சனம் செய்வதில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் ஆஹா ஓஹோ என்றும், பிடிக்காதவர் என்றால் சரமாரியாக குறை சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.  மக்கள் விமர்சனம் அதை விட மோசமாகிவிட்டது. தன் புத்திசாலி தனத்திற்கு படத்தை குறை சொல்ல தொடங்கிவிடுகிறார்கள்... படத்தை பார்த்து விட்டு சொன்னால் பரவாயில்லை, பார்காமலே படம் நன்றாக இல்லையென்று சொல்வார்கள் பலர். சில நண்பர்கள் என்னிடம் சொல்வார்கள் படம் நன்றாக இல்லையென்று.. படம் பார்த்து விட்டீர்களா என்றால் இல்ல பார்க்கல நண்பர்கள் படம் நல்லா இல்லை என்பார்கள்.. இப்படி தான் பலர் படத்தை பார்காமலே படத்தை பற்றி விமர்சனம் சொல்லி விடுகிறார்கள்.


பல நல்ல படங்கள் இப்படி தவறான விமர்சங்களால்,  வெற்றி பெற முடியாமல் போய் விடுகிறது விமர்சனம் செய்யும் பொழுது நாம் யோசித்தே செய்யவேண்டும்.. ஒரு படம் நன்றாக இல்லையென்று சொல்வது தான் இப்பொழுது பேஷன் ஆகிவிட்டது. ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் பொழுது போகிறதா அது தான் தேவை நமக்கு, அதை விட்டுவிட்டு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை அப்படி இப்படி குறை சொல்லி கொண்டு தான் இருக்கிறோம்.

பதிவுலகில் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் எழுதும் சிலர்.. படம் நன்றாக இல்லையென்று தான் பதிவு எழுதி இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லையென்று சொல்வது ஒரு பெருமையா.. ?? படங்களின் குறைகளை சொல்லலாம், டப்பா படம் என்று எல்லாம் விமர்சனம் செய்யலாமா..?? இப்படி பட்ட விமர்சங்களால் பலர் நல்ல படங்களை பார்க்க முடியாமல் போகிறது..!!   நல்ல படங்களை எந்த காழ்புணர்ச்சி இல்லாமல் விமர்சனம் செய்யுங்கள். என்ன தான் விமர்சனம் செய்பவர்கள் படம் நன்றாக இருக்கிறதென்று கூறினாலும் மக்கள் கண்டு கொள்ளாமல் விட்ட படங்களில் இந்த படமும் ஒன்று. 



படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே, படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன், எதிர்பார்த்தது வீண் போக வில்லை. படத்தின் கதை : அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறால் ஒரு சாதாரண கல்லூரி மாணவன் சிக்கி கொள்கிறார் அவர்களிடம் இருந்து மீண்டுவருகிறாரா இல்லையா என்பதே கதை. 

அருள் நிதியின் நடிப்பு பல மடங்கு மெருகேறி உள்ளது நன்றாகவே தெரிகிறது,சென்னையில் வளர்ந்த அவர் ஊர்காரரை போல் வட்டார மொழி பேசுவது சிறப்பாக உள்ளது. தனக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்து இருக்கிறார் அருள்நிதி.  அரசியல் காரணத்தால் இவர் படங்களை ஒதுக்காமல் இருந்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொள்வார். அந்த அளவிற்கு நடிப்பு திறமையை வைத்திருக்கிறார். 

இனியா முந்தய படத்தில் பார்த்த இனியா வா என கேட்க வைக்கிறார், நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். 

வில்லன் ஜான் விஜய், நகைச்சுவையில் வந்தால், நகைச்சுவையில் கலக்கி விடுகிறார், வில்லன் கதாபாத்திரம் வந்தால்.. அதிலும் ஒரு கை பார்த்து விடுகிறார்.. ஒரு தவறு செய்து விட்டு, பயத்தில் தவறுக்கு மேல் தவறு செய்து.. கண்களில் பயத்துடன் நடித்து இருக்கிறார் ஜான் விஜய்.. இனி நிறைய படங்களில் இவரை வில்லனாக பார்க்கலாம். 


இயக்குனர் சாந்தகுமார் முதல் படத்திலே நல்ல பெயரை வாங்கிவிடுகிறார், நேர்த்தியான திரைகதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்தவிதம், அனைத்திலும் நல்ல அனுபவம் பெற்றவராக தெரிகிறார். குறிப்பாக போலீஸ் எஸ்.ஐ உமா ரியாஷை தேர்வு செய்தது, நிறைய படங்களில் நல்ல போலீஸாக வருபவர் ஆணாக தான் இருப்பார், இதை இயக்குனர் மாற்றி யோசித்து இருக்கிறார்.  திரைக்கதையின் வேகம்.. ஹிரோவின் டல் லூக்,  ஹீரோவின் வசன உச்சரிப்புகள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம் என்று நன்றாக தெரிகிறது,  படம் பார்க்கும் பொழுது ஆங்கில படம் பார்த்த திருப்தி வருகிறது.  நல்ல படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பட்டியல்களில் சாந்தகுமார் படமும் இடம் பெரும். 

படத்தை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் இங்கு பகிராமல் விட்டு இருக்கிறேன், படம் பார்க்கும் பொழுது உங்களுக்கு சுவாரசியம் குறைந்து விடாமல் இருப்பதற்காக. நல்ல படங்களை எதிர்பார்பவர்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம். இந்த மாதிரியான நல்ல படங்கள் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவது வருத்தமான ஒன்று..



 
;